போர் நின்று கொல்லும்! - ஷோபாசக்தியின் புனைவுலகம்.

 



  சரியாக 16 ஆண்டுகளுக்கு முன்னர், இதே திகதியில்(மே 17-18) தான் ஈழத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்தேறியது. லட்சக்கணக்கான அப்பாவி மனித உயிர்களை பல பத்தாண்டுகளாக உண்டு செரித்த உள்நாட்டு போர் முடிவை எட்ட இந்த சம்பவம் முக்கிய காரணமாக அமைந்தது. 

போரின் பின் விளைவுகளை 2022 இலங்கை பொருளாதார நெருக்கடி வெளிச்சமிட்டுக் காட்டியது. 


இன்றைக்கு சர்வதேச தமிழ்ச் சமூகம் ஈழப் போரின் துயரங்களில் இருந்தும் ஆற்றாமையில் இருந்தும் மீண்டு வந்து கொண்டிருப்பதை அனுமானிக்க முடிகிறது. இலங்கையில் நடந்து முடிந்த அனைத்து அடுக்கு தேர்தல்களின் முடிவுகளும் இதையே நமக்கு உணர்த்துகின்றன. அங்குள்ள மக்களுக்கு அமைதி அவசியமான ஒன்றாக இருக்கிறது. 


போர் முடியலாம், போர் ஏற்படுத்தி சென்ற வடுவும் இழப்புகளும் ஒரு இனத்தின் கூட்டறிவில் இருந்து அகல வாய்ப்பில்லை. பல வழிகளில் அவை வெளிப்பட்டு கொண்டே இருக்கும். இசையும், இலக்கியமும், சினிமாவும், கலையும் போரின் வரலாற்றை நமக்கு நினைவூட்டி கொண்டே இருக்கின்றன.  


2024-ஆம் ஆண்டுக்கான புக்கர் விருது எழுத்தாளர் V.V. Ganeshananthan-ன் ‘Brotherless Night’ நாவலுக்காக கிடைத்ததை இங்கு நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும். ஈழ போராட்டத்தை மையமாக கொண்டு எழுதப்பட்ட நாவல் அது. இலக்கியத்தின் வழியே வெளிப்பட்ட அந்த வரலாறு தனிப்பட்ட முறையில் எனக்கு இலங்கை மீதான ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தது. 


போரை எதிர்கொள்வதை விடவும் கொடுமையானது அந்த நினைவுகளை கிளறி அதை இலக்கியமாக்குவது. யுத்தத்தின் இடையே வளர்ந்து, சோசலிச தமிழீழம் என்ற வெல்ல முடியாத விடுதலை போரின் ஒரு அங்கமாக செயல்பட்டு, உறவுகளையும், உடமைகளையும், உள்ளத்து ஈரங்களையும் இழந்து, ஏதிலியாக மாற்றப்பட்ட ஒரு கலைஞனின் எழுத்துக்கள் என்னை இரண்டு மாத காலம் காய்ச்சல் போல் பீடித்துகொண்டன. 


இரண்டு மாதத்தின் பல இரவுகளை விடுதலை இயக்க போராளியாகவும், போர் கைதியாகவும், தாயகத்தில் யாருமற்ற அனாதையாகவும், அயல்நாடில் வாழ வக்கற்ற சட்ட விரோத குடியேறிகளிடையேயும் கடக்க நேர்ந்தது. அவர்கள் அனைவரும் என் கனவில் வந்தார்கள். எழுத்தின் மூலம் மனதில் பதிந்த முகங்களில் முழு சித்திரத்தையும் சொப்பனத்தில் காண முடிந்தது. “எகிப்திலே பிரேதக் குழிகள் இல்லையென்றா வனாந்தரத்திலே சாகும்படிக்கு எங்களைக் கொண்டுவந்தீர்?” என்று ஷோபா சக்தியின் ‘ம்’ நாவலின் முகப்பில் இடம்பெற்ற வாக்கியம் மின்மினி போல் மனதில் தோன்றி மறைந்தது.  


1983 ஜூலை  25-ம் தேதி வெலிக்கடைச் சிறைச்சாலையில் சிங்கள வெறியர்களால் நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட கொலை வெறியாட்டம், 15 வயதே நிரம்பி இருந்த ஷோபாசக்தியை (இயற் பெயர்: அந்தோனிதாசன் யேசுதாசன்) விடுதலை இயக்கத்தில் இணைத்தது. அந்த காலத்தில் ஈழ விடுதலை இயக்கங்களில் புலிகள் மட்டுமே ஆயுதம் ஏந்திய போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்தால், இளம் வயது ஈர்ப்பும், உறவுகளை இழந்த ரணமும் இயற்கையாகவே புலிகளை தேர்வு செய்ய வழிவகுத்தது. 


அப்போது வடக்கு கிழக்கு என்ற பிரிவுகள் இருக்கவில்லை, தமிழர்-முஸ்லீம் பகை இருக்கவில்லை, சகோதர படுகொலைகள் இல்லை, தமிழ்நாட்டின் ஆதரவும் இந்தியாவின் ஆதரவும் இருந்தது, பாலஸ்தீனிலும் லெபனனிலும் போராளிகள் பயிற்சி பெற்று வந்தனர், நிறைவேற்றப்படாத ஒப்பந்தங்கள் நிறையவே குவிந்து கிடந்தன. தமிழர் உரிமைகள் மீது இலங்கை அரசின் செயலற்ற தன்மை ஆயுதம் ஏந்துவதை நியாயப்படுத்தியது. சோசியலிச தமிழீழத்தை லட்சியமாக கொண்டு இலங்கை அரசுக்கு எதிராக தொடங்கப்பட்ட ஆயுத போராட்டம் சொந்த மக்களையும், அப்பாவி சிங்கள மக்களையும், சகோதர இயக்கங்களையும் கொல்லத் துணிந்தது. 


இது ஜனநாயக மனம் கொண்டிருந்த போராளிகளையும், விடுதலை இயக்கத்தை ஆதரித்த அறிவிஜீவிகளையும் இயக்கத்திலிருந்தே விலகச் செய்தது. விவாதங்களுக்கு இடமில்லாத சர்வாதிகார அமைப்பாக புலிகள் உருவெடுத்தனர். புலிகளின் நிலைப்பாட்டில் இருந்து முரண்பட்ட தலைவர்கள் அனைவரும் புலிகளாலையே கொல்லப்பட்டார்கள். வெளிநாட்டுக்கு சென்ற பின்னரும் புலிகளின் துப்பாக்கி அவர்களது அப்பாவி உயிர்களை காவு வாங்கியது.


 1986-ல் ஈ.பி.ஆர்.எல்.எஃபைப் புலிகள் இயக்கம் தாக்கி அழிக்க நினைத்த நேரத்தில் ஷோபாசக்தி இயக்கத்தை விட்டு வெளியேறி இருக்கிறார். பின்னர் புலிகளால் பொய்குற்றம் சாட்டப்பட்ட கைதியாக சிறைபிடிக்க படுகிறார், இந்த தாக்கத்தில் விளைந்தது தான் அவரது முதல் நாவல் ‘கொரில்லா’. 


கொரில்லா


புனைவின் வழியே ஒரு  உண்மையை கதையை சொல்ல அந்த நிகழ்வின் பின்னணி அவசியமாக இருக்கிறது. சர்வாதிகார குரலுக்கு எதிராக ஏவப்பட்ட சிறுபான்மை குரலாக ஒலித்த ஷோபாசக்தியின் முதல் நாவல் 2001-ல் வெளியானது. ஒருவகையில் இது தன்வரலாறு. வடிவத்தில் இப்படி தனித்துவமான ஒரு நாவலை என் வாழ்நாளில் வாசிப்பது அதுவே முதல் முறை. 

ஒரு விடுதலை போராட்டம் பாசிசமாக மாறுவதை, அதில் ஒரு போராளி தன்னுடைய லட்சியத்தை இழைந்து, ஏற்றுக்கொண்ட அடையாளத்தை இழந்து நிர்வாணமாக நின்ற அவலத்தை இந்த நாவல் மிக நேர்மையாக காட்சிப்படுத்தியிருந்தது. பகடி கலந்த விவரிப்பும் அதே நேரத்தில் உணர்ச்சிகள் மேலோங்காத கதை சொல்லலும், அடிக்குறிப்புகளாக இடம்பெற்ற இறந்தவர்கள் பற்றிய தகவலும் இந்த நாவலின் முத்திரைகளாக சொல்ல தோன்றுகிறது.       


ம் 


2004- ஆம் ஆண்டு வெளியான ‘ம்’ நாவல், மேற்சொன்ன வெலிக்கடை சிறைப் படுகொலையை மையப்படுத்தி எழுதப்பட்ட ஒன்று. ஆனால் இது யுத்தத்தின் பற்களில் சிக்கி நாராக கிழித்து, மசிக்கப்பட்ட பல தனிமனிதர்களின் இருப்பை பற்றியதும் கூட.  மனதை பாதிக்கும், பதைப்பையும் திகைப்பையும் ஏற்படுத்தும் ஒரு சம்பவத்தை வாசித்துவிட்டு எவ்வித சலனமும் இன்றி உங்களால் கடக்க முடியுமா? அப்படியான கோரமும் குரூரமும் நிரம்பிய சம்பவங்களை எல்லாம் ‘ம்’ கொட்டி வாசிக்க வைக்கிறது இந்த நாவல். 


‘சாவு தன் ஊர்வலத்தை தொடர்கிறது’, என்ற வரி வெலிக்கடை சிறைப் படுகொலையின் யதார்த்தத்தை நம் முன் நிறுத்துகிறது. ‘ஜெயவேவா!’ என்று கூச்சலிட்டு கொண்டே சிறை தொகுதிக்குள் நுழைந்த சிங்கள வெறியர்கள்  தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன், தேவன், சிவபாதம் மாஸ்டர், நடேசுதாசன் உள்ளிட்ட எல்.டி.டி.இயை சேர்ந்த சிறை கைதிகளை பல துண்டுகளாக வெட்டி வீசினர். “குட்டிமணியைக் கொன்றுவிட்டோம் என்பதை யாழ்ப்பாணத்துக்குப் போய்ச் சொல்லுங்கள்” என்று சிங்கள வெறியர்கள் கூவிக் கொண்டே வெளியேறியது ஈழ தமிழ் மக்களின் பொதுப்புத்தியில் எவ்வித தாக்கத்தை உண்டாகி இருக்கும் என்பதை இன்றைக்கும் நினைத்தால் ரணமாக இருக்கிறது. 

மேலும் ‘ம்’ நாவல், போரில் பக்குவமற்ற குழந்தை போராளிகள் ஈடுபடுத்த பட்டத்தையும் அதற்கு இயக்கம் எவ்வித குற்றவுணர்வும் கொள்ளவில்லை என்பதையும் மிக சூட்சகமாக பதிவு செய்திருந்தது. இரத்தினங்களின் நாடு சிறைகளில் நாடாக மாறிப்போனதை சுட்டிக்காட்டி அந்த சிறைகளில் நிகழ்ந்த வதைகளை விவரித்தபோது நாஜிக்களின் வதைமுகாம்கள் கண் முன் தோன்றாமல் இல்லை. ‘நான் உண்மையை எழுதுகிறேன். அதை நீங்கள் நம்ப வேண்டும்.’ என்று நாவலில் வரும் வாக்கியம் இவை அத்தனையையும் ‘ம்’ சொல்லி கடக்க நம்மை எத்தனிக்கிறது. 


1956 முதல் ஈழ தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகளின் தொகுப்பை ஒரு ஆங்கில நூலக என் அலுவலக நூலகத்தின் கண்டெடுத்து புரட்டி பார்த்த நேரத்தில் என்னை அறியாமலே என் அகம் விம்மியது.  


BOX கதை புத்தகம்


 ஷோபாசக்தியின் மூன்றாவது நாவல் ‘BOX கதை புத்தகம்’, மேற்சொன்ன இரண்டு நாவல்களை காட்டிலும் வடிவத்தில் எளிமையை தரித்திருந்த நாவல் இது. போர் முற்று பெற்றிருந்த போதும்  ஈழத்தமிழ்ச் சமூகத்தில் சாதி எவ்வளவு ஆழமாக புரையோடிப் போய் இருக்கிறது என்பதை, பெரிய பள்ளன் குளம் என்ற கிராமத்தை மையமாக கொண்டு புரிந்து கொள்ள வகை செய்தது இந்த கதைப் புத்தகம். 


பாரிஸ் நகரத்தை சேர்ந்த மெதடிஸ்த திருச்சபையின் விசுவாசம் மிக்க ஊழியரான Titus Lemuel அவர்கள் பெரிய பள்ளன் குளத்தில் 1928-ஆம் ஆண்டு உருவாக்கிய பாட சாலை ஒரு சின்னமாக/குறியீடாக இந்த நாவல் முழுக்க பயன்படுத்தப் பட்டிருக்கிறது. 


“அம்மா! ஒரு நல்ல துறவி எப்போதும் துறவியாக இருப்பதில்லை”  என்று நாவலின் நாயக பாத்திரமான கார்த்திகை(சந்த ஸ்வஸ்திக தேரர்) தனது தாயிடம் சொல்லும் சொற்கள், சிங்கள பௌத்த பேரினவாதம், இராணுவம் மூலம் நிகழ்த்திய கொடுமைகளின் அசல் முகத்தை நமக்கு வெளிச்சமிட்டு காட்டுகிறது. பல படிமங்களை கொண்ட இந்நாவல், இராணுவ தளமாக மாற்றப்பட்ட ஒரு கிராமத்தின் வரலாற்றை நமக்கு தெரிவிக்கிறது.

 இலங்கையில் போரில் உயிர்பிழைத்த பெண் போராளிகளை கொண்டு நடத்தப்பட்ட பாலியில் விடுதிகளைப் பற்றி குறிப்புகள் நமக்கு உளவதையை உருவாக்குகின்றன. ஒஸ்கார் ஸிங்கோ என்ற லைபீரிய எழுத்தாளர் ஆசியாவில் பாலியல் தொழிலிற்காகக் கடத்தப்படும் சிறுமிகளையும் பெண்களையும் குறித்து 2010-ல் Island of Butterflies என்ற நூலை எழுதுகிறார். அதில் ஈழ பாலியல் விடுதிகள் பற்றிய தகவல்கள் இடம்பெற்ற ஓர் அத்தியாயம் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு இந்நூலில் உபபிரதியாக இடம்பெற்றுள்ளது.   


நாவலின் இறுதி அத்தியாயம் இந்த புத்தகத்தை எழுதவதற்காக பெரிய பள்ளன் குளத்தை நேரில் பார்ப்பதற்காக சென்ற ஷோபாசக்தியின் அனுபவ குறிப்போடு நிறைவடைகிறது. அந்த கிராமத்தின் தற்போதைய நிலையை அவர் பதிவு செய்யும்போது, அதன் பெயர் உட்பட அனைத்தும் முற்றிலுமாக அடையாளமே தெரியாமல் சிதைக்கப்பட்டிருப்பதை உணர முடிகிறது. அதன் பெயர் கூட லொக்கு பள்ளங் குளம என்று மாற்றப்பட்டு விட்டதாம். 


அந்த கிராமத்தில் நுழைந்ததும் ஷோபாசக்தியை வரவேற்ற இராணுவ அதிகாரி சிங்களத்தில் கதைத்த வார்த்தைகள் இவை, “இப்போது யுத்தம் முடிந்துவிட்டதுதானே இன்னும் ஏன் பிரான்ஸில் இருக்கிறீர்கள்... தாய்நாட்டுக்கு வந்துவிடுங்கள்". 


ஸலாம் அலைக்


ஷோபாசக்தியின் நான்காவது நாவலான, ‘இச்சா’ நூலை படிக்கும் முன்பே நான் ‘ஸலாம் அலைக்’ நாவலை வாசித்திருந்தேன். ஸலாம் அலைக் என்ற அரபி சொல்லின் பொருள், ‘உங்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!’ என்பதாகும்.  2022-ல் வெளியான இந்நாவல் அவரது 5-வது நாவல். வடிவமைப்பில் மிகவும் விதியசமானதாக இருந்ததே இதன் மீதான ஈர்ப்பை கூட்டி இருந்தது. 

போரின் பிடியில் இருந்து தப்பித்த தேசமற்ற இலங்கை அகதியின் வாழ்க்கையை நாவலின் இரண்டு முனைகளில் இருந்தும் தொடங்கி தெரிவிக்கிறது இந்நாவல். எந்தப்பக்கம் இருந்து படித்தாலும் La Marseillaise என்று தொடங்கும் பிரஞ்சு நாட்டு தேசிய கீதத்துடன் நிறைவடைகிறது இந்நாவல். 


தேசியம் என்ற கருத்தியல் வலுப்பெற அயலார் என்ற பதம் அவசியமாக இருப்பதையும், அந்த சொல் செயல்பாட்டில் அகதிகளை எப்படி நடத்துகிறது என்பதையும், பிரான்ஸ் போன்ற Liberal Democracy-களில் ஏதிலிகளின் மனித உரிமைகள் எப்படி மீறப்படுகின்றன என்பதை துல்லியமாக பதிவு செய்கிறது இந்நாவல். 



நான் நீல அட்டையிலிருந்து வாசிக்க தொடங்கினேன்,  1951 Geneva Convention-ஐ மேற்கோளிட்டு தொடங்கும் இந்த நூல், ஜெபானந்தனின் என்று ஈழ அகதியின் வாழ்க்கையை மையமாக கொண்டு அந்த உடன்படிக்கை எப்படி எல்லாம் மீறப்படுகிறது என்பதை கதையாக நமக்கு கடத்துகிறது.    


“இந்த உலகத்தில் ஒரே ஒரு கதைதான் உண்டு” என்ற வரி நாவல் பல இடங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது, அந்த கதை துயரமான ஒன்று என்பதையே நாடற்ற ஈழ அகதி ஜெபானந்தனின் கதை தெரிவிக்கிறது. துயரத்தில் தவிக்கும் அனைவருக்கும் ‘அமைதி கிட்டட்டும்’ என்பதே நாவலின் கரு. 


“எண்ணங்கள் ஒளியிலும் வேகமானவை. ஒளியிலும் வெளிச்சமானவை.” என்று இந்நாவலின் ஓரிடத்தில் வரும் வரி என்னை வெகுவாக கவர்ந்தது. போரில் மட்டுமல்ல போர் முடிந்த பிறகும் கூட ரணங்களும் துன்பங்களும் தீர்வதில்லை என்பதை ‘ஸலாம் அலைக்’ அழுத்தமாக பதிவு செய்கிறது. 


இச்சா


ஷோபாசக்தியின் புனைவுகளில் நான் கடைசியாக படிக்க தொடங்கியது ‘இச்சா’ நாவலை தான். கடைசியாக வாசித்ததாலா என்று தெரியவில்லை என்னை அதிகம் பாதித்ததும் கவர்ந்ததும் இந்த நாவல் தான். ஒரு பெண் இந்த கதையை சொல்வது பிரதான காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன். 


வெள்ளிப்பாவை (எ) கப்டன் ஆலா, புலிகளின் சிறப்புத் தாக்குதல் படையணியான கரும்புலி இயக்கத்தை சேர்ந்தவர். குழந்தை போராளியாக இயக்கத்தில் இணைந்தவர்.  பாலத்தை குண்டு வைத்து தகர்க்கும் திட்டம் தோல்வியுற்று, இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு, 300 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டு கண்டி ரஜ வீதியச் சிறையில் அடைக்கப்பட்டார்.  அப்போது அவர் எழுதிய பக்கங்களை எல்லாம் சிறை அதிகாரி ஒருவர் மூலம் தன் கைகளுக்கு கிடைக்கப்பெற்றப்பின் எழுதப்பட்ட நாவல் இது என்கிறார் ஷோபாசக்தி.  


மற்ற நாவல்களில் இல்லாத அளவுக்கு இதில், காமம் உள்ளிட்ட தன் உணர்வுகள் அதிகம் கவனப்படுத்த பட்டிருக்கின்றன. “அன்பு, பாசம், காதல், நட்பு போன்ற உணர்வுகள் நம்மில் உருவாவதற்குக் கண்டிப்பாக இன்னொரு உயிரி நமக்குத் தேவைப்படுகிறது. ஆனால் காமம் சுயம்” என்ற வரி இதை மேலும் உறுதி படுத்துகிறது. 

சிறையில் படும் துன்பங்களையும், அல்லல்களையும்  பதிவு செய்ததோடு மட்டுமின்றி, இளம் வயதில் தான் சந்தித்த பாலியல் வதைகள், இயக்கத்தில் நுழைந்ததற்கான காரணம், அங்கு வழங்கப்பட்ட துப்பாக்கி கொடுத்த தைரியம், புலிகளில் தளபதிகளில் ஒருவரான சுல்தான் பப்பாவுடனான உறவை, கரும்புலியாக தான் மேற்கொண்ட பயிற்சியை, அதனை செயல்படுத்த தனக்கு வழங்கப்பட்ட செயல்திட்டத்தை எல்லாம் அப்படியே பதிவு செய்கிறார் ஆலா. 


இதனோடு ஒரு கற்பனை கதையும் சொல்லப்படுகிறது, சிறையில் இருந்து விடுதலையை விரும்பிய ஆலா தனக்கு தானே புனைந்து கொண்ட கதை அது. வாமன ரூபத்தில் சிறை மீட்பர்,  திருமணம், குழந்தை, அயல்நாட்டு பிரவேசம், அங்கு சபிக்கப்பட்ட வாழ்க்கை என அத்தனையும் மிக அற்புதமாக நம்பத்தகுந்த வகையில் புனையப்பட்டிருக்கிறது. நாவல் ஆசிரியர் இறுதி அத்தியாயத்தில் தெளிவுபடுத்தாமல் இருந்திருப்பாரேயானால்  இவை ஆலாவில் குறிப்புகளில் புனையப்பட்ட பகுதிகள் என்பதை கூட நம்மால் விளங்கி கொள்ள முடியாமல் போயிருக்கும். இறுதி அத்தியாயம் தான் நாவலுக்கு ஒருவித நிறைவை வழங்குகிறது. 


ஆலாவின் இளம் அகவையில் நடந்த பாலியல் வதைகளை எல்லாம் புனைவின் மூலம் நீட்டித்து தன் கணவனோடு தொடர்புபடுத்தி, ‘காம இச்சையின்’ வெளிப்பாட்டை கதையாகியுள்ளார். ஷோபாசக்தியின் மற்ற நாவல்களில் இல்லாத அளவுக்கு இந்நாவல் காமத்தையும் பெண்ணியத்தையும் பேசும் ஒன்றாக இருக்கிறது. 


ஆலா அடைய விரும்பிய மகிமை மிக்க சாவும் கூட, ஒரு இச்சைதான். விடுதலை என்ற இச்சையின் நிமித்தமாக  கற்பனையாக ஒரு மொழியையும், ஒரு நாட்டையும், ஒரு கணவனையும், காமத்தையும், குழந்தையையும், ஒரு தோழனையும் அவர் ஆக்குகிறார். ‘உயிருள்ள ஆலா பறவையொன்றை நீங்கள் பார்த்திருக்குகிறீர்களா!’ என்ற இச்சையை தூண்டும் வாக்கியத்துடன் இந்நாவல் நிறைவடைகிறது. நிறைவான வாசிப்பனுபவம். 


ஷோபாசக்தியின் புனைவுலகம் முழுக்க முழுக்க ஈழ விடுதலை போராட்டதில் பங்கேற்று பாதிக்கப்பட்ட போராளிகளாலும் அகதிகளாலும் ஆனது. அவரது கச்சிதமான மொழி நடை, புனைவுக்கே உரிய வலுவை அளிக்கிறது, வாசிப்பை எளிமையாக்குகிறது. அவருடைய சில சிறுகதைகளில் வரும் ஈழ தமிழை எண்ணி திகைத்த எனக்கு இந்த ஐந்து நூல்களும் இளைப்பாறல் மிக்க வாசிப்பையே வழங்கின. 


ஷோபாசக்தியின் கதைகள் உண்மைக்கு நெருக்கமானதாக இருந்தபோதும் அனைத்து நாவல்களின் முகப்பிலும் ‘Fiction’ என்று வலிந்து எழுத என்ன காரணமாக இருக்கும்? விமர்சனங்களை ஏற்க பக்குவப்படாத, போரையும் போராளிகளையும் புனிதம் என கருதி போற்றும் உணர்வெழுச்சி கொண்ட சராசரி தமிழனுக்காக இதை புனைவென்று சொல்ல வேண்டியிருக்கிறது. அவன் சகிப்பின்மையின் காரணமாக ஒரு படைப்பின் மீது நிகழ்த்தும் வன்முறையும் வெறுப்பும், போர் வெறிக்கு சரிநிகரான ஒன்றாக இருக்கிறது. தவிர்த்து உண்மைகளை புனைவென எண்ணி வாசிக்கும்போது சுவாரசியமும் கூடவே செய்கிறது. 


அணு குண்டு நிலத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை போலவே பல தலைமுறைகள் பாதிப்படையும் வகையிலான தாக்கத்தை போர் மக்கள் மீது ஏற்படுத்துகிறது. ஷோபாசக்தியின் புனைவுகள் போரினால் பாதிக்கப்பட்ட இந்த மக்கள் படும் அல்லைகளை பகடி கலந்த விவரணைகளோடு நமக்கு கடத்துகிறது. போர்க்களத்தை தாண்டியும் போரின் வடு எப்படி எல்லாம் மனிதர்களை வஞ்சிக்கிறது என்பதை இந்த உண்மை கதைகள் தெரியப்படுத்துகின்றன. 


ஈழப்போர் என்பது இலங்கை ரானுவத்திற்கும் புலிகள் இயக்கத்திற்கும் இடையில் நடந்தது மட்டுமல்ல, அதில் எண்ணிலடங்கா அப்பாவி தமிழர்களும் சிங்களர்களும் பகடை காய்களாக நிறுத்தப்பட்டு உயிரை இழந்திருக்கிறார்கள். வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு ராணுவமும் போராளிகளையும் தான் தெரியும், போரில் மரணித்த ஒவ்வொரு மனிதருக்கு பின்னாலும் ஒரு கதை இருக்கிறது, அக்கதைகளை அதிகாரத்தின் மீதான விமர்சனங்களுடன் ஷோபாசக்தி புனைவாக்குகிறார். அந்த புனைவு போருக்கும் போர் விரும்பிகளுக்கும் எதிரானது, அமைதிக்கும் விடுதலைக்குமானது. முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் போரில்லா பூமி படைக்க உறுதியேற்போம்! 



P.S: 

மயிலன்.ஜி.சின்னப்பன் மூலம் தான் எனக்கு ஷோபாசக்தி அறிமுகமானார், 2025 புத்தக காட்சியில் அவருடைய சிறுகதை தொகுப்பை விரும்பி வாங்கினேன். எழுத்தாளர் சுகுணா திவாகர், உயிர்மை இதழில் வெளியான ஷோபாசக்தியின் நேர்காணலை படிக்க கொடுத்தார். V.V. Ganeshananthan-ன் புக்கர் பரிசு வென்ற நாவல், ஈழ இலக்கியங்களை படிக்க உந்தித்தள்ளியது. இச்சா தவிர்த்த 4 நாவல்களையும் வாங்கியிருந்த எனக்கு, பதிப்பாளர் கருப்பு நீலகண்டன் தான் இச்சா நாவலை தொகை ஏதும் பெற்றுக்கொள்ளலாமல் அனுப்பி வைத்தார். அண்ணன் தமிழ் காமராசன் பெரிய கட்டுரையா எழுதி பாரு பா என்று ஊக்கமூட்டினார். ஷோபாசக்தியின் புனைவுலகுக்குள் நாள் நுழைய காரணமாக இருந்த அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றி. கட்டுரையை படித்துவிட்டு கருத்தளியுங்கள்! 




Comments