மீனாட்சிபுரம் பெருந்திரள் மதமாற்றம் - ஒரு சமூகவியல் ஆய்வு

     




மீனாட்சிபுரம் பெருந்திரள் மதமாற்றம் பற்றிய நினைவுகள் சில இஸ்லாமியர்களைத் தவிர்த்து அனேகமாக பொதுச் சமூக நினைவிலிருந்து முற்றிலும் நீங்கிவிட்டதாகவே தெரிகிறது. தமிழ்நாட்டில் வேங்கைவயல் போன்ற சாதிய வக்கிரங்கள் நிகழும் யுகத்திலும் இந்தியாவில் ,   இந்துத்துவம் இஸ்லாமிய மக்களை இரண்டாம் குடிகளாக மாற்றத் துடிக்கும் காலகட்டத்திலும் மீண்டும் மீனாட்சிபுரம் பெருந்திரள் மதமாற்றத்தைக் குறித்துப் பேசுவதும் விவாதிப்பதும் அவசியமாகும். 



அத்தகைய விவாதத்தின் தொடக்கமாக 2023 ஜனவரி மாதம் வெளியான மொழிபெயர்ப்பு நூலான “மீனாட்சிபுரம் பெருந்திரள் மதமாற்றம் - ஒரு சமூகவியல் ஆய்வு” என்ற மும்தாஸ் அலீ கான் அவரது நூலினை குறிப்பிடலாம். “Mass Conversionof Meenakshipuram:  A Socialogical Enquiry” என்று ஆங்கிலத்தில் 1980-81 காலகட்டத்தில் வெளியான இந்நூலினை ப. பிரபாகரன் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். மிக நேர்த்தியாக வாசிப்பில் எந்த தடையினையும் ஏற்படுத்தாத மொழிபெயர்ப்பு. ஒரு ஆய்வு நூலுக்கு இதுபோன்றமொழிப்பயிர்ப்பு வாய்ப்பது அரிது. கடைசியாக க.அ. மணிக்குமாரின் “முதுகுளத்தூர் படுகொலை” நூல் இத்தகைய வாசிப்பனுபவத்தைக் கொடுத்தது. 


தமிழ்நாட்டில் இன்றைய அதிமுக-பாஜக உறவின் வேர் பார்ப்பன தலைமையான ஜெயலலிதா காலத்தில் தொடங்கியதல்ல அது எந்த ஒரு கோட்பாட்டு அடித்தளமும் இல்லாத எம்ஜிஆர் காலம் முதலே தொடர்வதாகும். அதிமுக என்ற கட்சிக்குள் மென்மையான மதவாதம் தொடர்ந்து இருந்தே வந்துள்ளது. அதைத்  தான் மீனாட்சிபுரம் பெருந்திரள் மதமாற்றம் நடைபெற்ற 1980 ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த அதிமுக அரசு ஆற்றிய மிக மோசமான எதிர்வினை நமக்கு  உணர்த்துகிறது. அதன் தொடர்ச்சி தான் ஜெயலலிதா  ராமர் கோவில் கட்ட செங்கல் அனுப்பியது, அடித்தள மக்கள் வழிபாடும் கோவில்களில் உயிர்ப்பலியைத் தடை செய்ததெல்லாம். மீனாட்சிபுரம் பெருந்திரள் மதமாற்றம் நடைபெற்ற சமயத்தில்  மதமாற்றத் தடை சட்டம் வேண்டும் போன்ற கோரிக்கைகள் எல்லாம் ஆளும்கட்சி தரப்பிலிருந்து எழுப்பப்பட்டது. மேலும் பிற அரசியல் கட்சிகள் மதமாற்றம் குறித்துக் கொண்டிருந்த பார்வையை இந்நூலில் காண முடியும். அதே நேரத்தில் மதம் குறித்தும் மதமாற்றம் குறித்தும் திமுக கொண்டிருந்த நிலைப்பாடு அதன் சிறுபான்மையினர் சார்ந்த கொள்கைப் பிடிப்புக்குச் சான்றாகும்.  



இந்நூல் ஆறு அத்தியாயங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது முதல் அத்தியாயம் ஆய்வின் நோக்கம் குறித்தும் அது மேற்கொள்ளப்பட்ட முறை குறித்தும் பெருந்திரள் மத மாற்றத்திற்கான காரணங்களையும் அத்தகைய மதமாற்றத்திற்கு அரசியல் கட்சிகள் ஆற்றிய எதிர்வினையையும் மிகச் சுருக்கமாகச் சொல்கிறது. எந்த ஒரு அமைப்பிடமும் நிதி உதவி பெறாமல் சொந்த முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விது என்பதால் இதன் நம்பகத்தன்மையும் நடுநிலைமையும் உறுதியாகிறது. ஒரு அறிமுகத்தை வழங்கும் அத்தியாயமாக இதைக் கொள்ளலாம். 



இரண்டாவது அத்தியாயம் தமிழ்நாட்டில் சாதி அமைப்பு பற்றியும் குறிப்பாகத் திருநெல்வேலி மற்றும் மீனாட்சிபுரம்  பகுதியில் இருக்கும் மக்கள் தொகை விவரங்களையும் சமூக நிலைமைகள் பற்றியும் நமக்குத் தெரிவிக்கிறது. மீனாட்சிபுரத்தில் நிலவிய சாதிய உறவுகள் அங்கு மதமாற்றம் நடக்கும் என்பதற்கான ஒரு அறிகுறியை நமக்கு அளிக்கிறது. குறிப்பாக அந்த வட்டாரத்தில் ஆதிக்கச் சாதியாகவும் நிலவுடைமை சாதியாகவும் இருக்கும் தேவர்கள், தேவேந்திர குல வேளாளர்கள்(பள்ளர்) மீது செலுத்திய ஆதிக்கத்தையும் ஒடுக்குமுறைகளையும் இதில் பார்க்கமுடிகிறது. பள்ளர்(தேவேந்திர குல வேளாளர்கள்) சமூக மக்களிடம் பரவி இருந்த கல்வியும் அரசியல் விழிப்புணர்வும் நீண்டநாள் அவர்கள் மனதில் துடித்துக் கொண்டிருந்த இஸ்லாம் மதமாற்றம் பற்றிய சிந்தனைகளையும் இந்த அத்தியாயம் கொண்டிருக்கிறது.  


மீனாட்சிபுரம் மக்கள் கிறித்துவத்தையும் பௌத்தத்தையும் தவிர்த்து விட்டு இஸ்லாத்தைத் தேர்ந்தெடுத்ததன் காரணம் என்ன என்பதை ‘மதமாற்றம்: உண்மைகளும் விளைவுகளும்’ என்ற மூன்றாம் அத்தியாயம் கொண்டிருக்கிறது. மதமாற்றம் நிகழ்ந்த விதத்தையும் அது நடந்த உடன் நடைபெற்ற சம்பவங்கள் அதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட எதிர்வினைகள் மீள்மதமாற்றங்கள் போன்றவற்றை இந்த அத்தியாயம் விரிவாகப் பேசுகிறது. தனிநபர், சமுதாயம், அரசாங்கம், அரசியல் காட்சிகள், மத அமைப்புகள் என அணைத்து தரப்பும் பெருந்திரள் மதமாற்றத்தை எவ்வகையில் அணுகினார்கள் என்பதற்கு இந்த அத்தியாயம் பதில் கொண்டிருக்கிறது.  பள்ளர்(தேவேந்திர குல வேளாளர்கள்) சமூக மக்கள் மதம் மாறுவது தேவர்களுக்கு பெரும் அதிகார விழிச்சியாகப் பார்க்கப்பட்டது.  வட்டார அளவில் அவர்களுக்கு இருந்த சில நிலவுடைமை அதிகாரங்களை வைத்துக்கொண்டு அவர்களால் ஏற்படுத்த முடிந்த சில தடைகளை ஏற்படுத்தினார்கள். ஆனால் ஒட்டுமொத்தமாக மதமாற்றம் அங்குப் பெரிய மதக் கலவரங்களை உருவாக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ், VHP, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் மத கலவரத்தை ஏற்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தது. தமிழ்நாட்டின் நீண்ட நெடிய பெரியாரிய மரபு தான் இதற்குக் காரணம் என்பது ஆய்வாளரின் கருத்தாக இருக்கிறது. 


நான்காவது அத்தியாயம் தான் இந்நூலில் பேசப்படும் ஆய்வு முடிவுகளுக்கு ஆதாரமாக உள்ளது . தனிநபர் நேர்காணல்கள் மூலம் நிகழ்த்தப்பட்ட ஆய்வுமுடிவுகளுக்கான தரவுகளைக் கேள்விகள் அடிப்படையில் “ஏற்பு” “மறுப்பு” என்ற வகையில் பிரிக்கப் பட்டிருக்கின்றன. அட்டவணை பிரிவினர், பார்ப்பனர்கள், பார்ப்பனர் அல்லாத உயர்சாதியினர், பார்ப்பனர் அல்லாத கீழ் சாதியினர், கிறித்துவர்கள், முஸ்லிம்கள் என இதன் பங்கேற்பாளர்கள் முறையாகப் பிரிக்கப்பட்டு அவர்களது கருத்துக்களும் இடம்பெற்றிருக்கிறது. 


பெருந்திரள் மதமாற்றத்திற்கு அரபு பணம்/ petro currency தான் காரணம் என்று கிளப்பிவிடப்பட்ட பொய்யை இந்த அத்தியாயத்தில் இருக்கும் தனிநபர் நேர்காணல்கள் மறுக்கவே செய்கிறது. மதம்மாறியோர், அட்டவணை சாதி மக்களைத் தாண்டி தேவர்களில் கணிசமான மக்களும் மதமாற்றத்திற்குப் பணம் காரணம் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளவே செய்கிறார்கள். மீள்மதமாற்றங்கள், அரசின் நடவடிக்கைகள், ஊடகங்கள் வகித்த பாத்திரம், இந்துமத எதிர்ப்பு போன்ற முக்கியமான சில ஆய்வு பார்வைகளும் இதில் இடம்பெற்றிருக்கிறது. 


ஐந்தாவது அத்தியாயம் 20க்கும் மேற்பட்ட தனிநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்களைக் கொண்டிருக்கிறது. இதில் பெரும்பாலானோர் மதமாற்றத்திருக்கான காரணமாக அவர்களது சுயமரியாதையையே காரணம் காட்டுகின்றனர். சாதிய ஒடுக்குமுறை, சாதியின் காரணமாக அவர்களுக்கு ஏற்படும் இழிவு போன்றவை கூடுதல் காரணமாக இருந்துள்ளது. பல ஆண்டு காலமாகத் திட்டமிடப்பட்டு ஒரு திடீர் நிகழ்வால் மீனாட்சிபுரத்தில் பெருந்திரள் மதமாற்றம் நிகழ்ந்துள்ளது.  மேலும் அட்டவணை சாதிகள் கிருத்துவத்திற்கு மதம் மாறியும் அவர்களுக்கு சமூக சமத்துவம் கிடைக்கவில்லை, இஸ்லாத்தில் ஓரளவுக்கான சமூக சமத்துவமும் சுயமரியாதையும் அவர்களுக்குக் கிடைப்பதாகப் பெரும்பாலானோர் சொல்கிறார்கள். மதமாற்றம் அறிவிக்கப்பட்ட அன்றே சிலர் மதம் மாறாமல் இருந்துள்ளனர் இன்னும் சிலர் குடும்ப அமைப்புக்கு அஞ்சி மீள்மதமாற்றம் செய்துகொண்டனர். மீனாட்சி புறத்திலிருந்த சில சிறுவர்களிடமும் இதைப் பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அவர்களும் மதமாற்றம் பற்றி அறிந்தே உள்ளனர். தேவர்களில் சிலரும், பார்ப்பனர்களும் மதமாற்றத்தை மிக மோசமாக விமர்சிக்கவும் செய்துள்ளனர். ஆய்வாளர் தனது இஸ்லாமிய அடையாளத்தை மறைத்துக் கொண்டே சில நேர்காணல்களை நடத்த முடிந்திருக்கிறது. இந்திய ஒன்றிய  அளவில்  விவாதத்தைக் கிளப்பிய மீனாட்சிபுரம் பெருந்திரள் (280 குடும்பங்கள்)மதமாற்றம் பிராந்திய அளவில் எவ்வித கலவரங்களை உருவாகவில்லை என்பது கவனிக்கத்தக்கது. 

கடைசி அத்தியாயத்தில் சில ஆய்வு முடிவுகளையும் அரசுக்குப் பரிந்துரைகள் சிலவற்றையும் வழங்கி இருக்கிறார் இந்நூல் ஆசிரியர். அந்த பகுதியிலுள்ள உயர்சாதிகளால் தலித்துகள் காலம் காலமாக அனுபவித்த அவஸ்தைகளும் கொடுமைகளும் மதம் மாற காரணமாக அமைந்தது. கிறித்துவத்திற்கு மதம் மாறியும் சாதிய இழிவு நீங்காத காரணத்தால் குறைந்தபட்ச அச்சமத்துவங்களைக் கொண்ட இஸ்லாத்துக்கு மதமாற்றம் செய்தனர். பெருந்திரள் மதமாற்றங்கள் தமிழ்நாட்டில் நிகழ்வதற்குக் காரணமாகக் கல்வி பரவலும், உரிமைகள் குறித்தான விழிப்புணர்வும், சுயமரியாதை வேட்கையும் காரணமாகக் கூறப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டில் இருக்கும் அதிகார அமைப்புகளில் சாதியம் பல இடங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது. இதனால் தலித்துகள் பெரிதும் இன்னல்களுக்குள்ளாகிறார்கள். வழக்குகளில் ஒருதலைபட்சமாக முடிவுகள் எட்டப் படுகிறது. அதிகார அமைப்புகளில் சாதியத்தின் வேர்களை அறிய ராதா குமார் எழுதிய Police Matters என்ற நூலும் மணிக்குமார் எழுதிய முதுகுளத்தூர் கலவரம் புத்தகமும் உதவும். 


காங்கிரஸ் மற்றும் அஇஅதிமுக அதிக செல்வாக்கு செலுத்திய தென் தமிழகத்தில், ஆதிக்கச் சாதியான தேவர்கள், மறவர்கள் தலித்துகளுக்கு எதிராகச்  செய்யும் குற்றங்களைச் சரியாகக் கவனிக்காமல் விட்டது இரண்டு சமூகத்தவருக்கு இடையிலான முரண்களை மேலும் அதிகமாக்கி இருந்தது. இந்த முரண் கவனிக்கப்படாமல் இருந்தது மதமாற்றத்திற்கு மேலும் ஒரு காரணமாகச் சொல்லப் படுகிறது. மதமாற்றத்தைத் தடுக்க அதிமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தியது. 

மீனாட்சிபுரம் மதமாற்றத்தால் இந்து-முஸ்லிம் உறவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதும் சமூக நல்லிணக்கம் சீர்குலையவில்லை என்பதும் கவனிக்கப்படவேண்டியது. அதன் காரணங்கள் நுணுக்கமாக ஆராயப்பட வேண்டியது. காலம் காலமாக நடந்து வரும் பெருந்திரள் மதமாற்றங்களின்  தொடர்ச்சியாகவே இந்நிகழ்வையும் பார்க்கவேண்டும். 


இஸ்லாமியக் குடும்பங்களில் பெண்களின் நிலை குறித்து இந்நூல் சில செய்திகளைப் பதிவுசெய்தலும், அதிலுள்ள பிற்போக்கு ஆணாதிக்க அம்சங்களைச் சரியாகப் பதிவு செய்யவில்லை. அப்படியான ஒன்று ஆய்வின் எல்லையை மீறியதாக இருக்கும் என்று சொல்லப்பட்டாலும் இஸ்லாம் மீது சமகாலத்தில் வைக்கப்படும் விமர்சனங்களைச் சீர்தூக்கிப் பார்க்கப் பெண்களின் நிலை பற்றிய ஆய்வு நிச்சயம் உதவு இருக்கும். 

சமகாலத்தில் மீனாட்சிபுரம் பெருந்திரள் மதமாற்றம் போல் ஒரு நிகழ்வு ஏற்படுத்தும் அதிர்வுகளை யூகித்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. வளர்ந்துவரும் இந்துத்துவமும் அதிகரித்து வரும் சாதிய மோதல்களும் இருவேறு சமூக சிக்கல்களின் பரிணாமத்தை உணர்த்தினாலும் அவை ஏற்படுத்தும் மோசமான விளைவுகளைக் குறைத்து மதிப்பிட முடியாது.  

அந்த வகையில் 40 ஆண்டுகளுக்குப் பின் வெளியாகி இருக்கும் இந்நூல் மதம் குறித்தும் இஸ்லாம் குறித்தும் ஒரு பெரும் உரையாடலை நிகழ்த்தும் சாத்தியத்தைக் கொண்டிருக்கிறது. வாய்ப்பிருப்போர் வாசிக்கவும்.  





Comments