சென்னை மெட்ரோ ரயில் திட்டம்


 இடம் பொருள் கலைஞர் - 12


சென்னை மெட்ரோ ரயில் திட்டம்


முன்னேற்றப் பாதையில் வளர்ச்சியின் தொடர் ஓட்டம்


'அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ செல்லும் அடுத்த ரயில் முதலாம் நடைமேடையில் வந்து கொண்டிருக்கிறது' என்ற அறிவிப்பை இனிமையான பெண் குரலில் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்த அனைவராலும் கேட்டிருக்க முடியும். ஒரு காலத்தில் தென் சென்னையிலிருந்து வட சென்னைக்கோ, அல்லது வட சென்னையிலிருந்து தென் சென்னைக்கோ செல்ல வேண்டும் என்றால், குறைந்தபட்சம் இரண்டு மூன்று பேருந்துகள் அல்லது ஷேர் ஆட்டோக்கள் மூலம் சென்றடைய வேண்டும். சக்தி, நேர விரயம் கொண்ட அந்தப் பயணம் பலருக்கும் அலுப்பூட்டிவிடும்.


ஆனால் இன்று, அந்த இரண்டு சென்னைப் பகுதிகளின் புவிப்பரப்பை இணைக்கும் ஒன்றாக மெட்ரோ ரயில் விளங்குகிறது. அதுவும் சில நிமிடங்களில் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்குச் செல்லும் பயணம் சாத்தியமாகி இருக்கிறது.


சென்னையின் மொத்தத்தையும் ஊடறுத்துச் செல்லும் மெட்ரோ ரயிலின் கட்டுமானங்கள் தொடர்ந்து வளர்ந்த வண்ணமே இருக்கின்றன. சென்னை போன்ற வளர்ந்துவரும் நகரத்துக்கு மெட்ரோ ரயில் கட்டுமானம் என்பது சில ஆண்டுகளில் முடிந்துவிடும் திட்டமல்ல. நகரத்தின் தேவைக்கேற்ப வளர்ந்துகொண்டே செல்லும் திட்டம்.


நவீனத்தின் மின்னல் கீற்று


கான்கிரீட் காடாக இருக்கும் சென்னை மாநகரத்தில் காலை 5 மணிக்குத் தொடங்கி இரவு 11 மணி வரை நகரத்துக்கு மேலும் கீழும் எந்திர மானைப் போல் துள்ளி ஆடி இயங்கிக் கொண்டிருக்கிறது சென்னை மெட்ரோ. சர்வதேசத் தரம் கொண்ட ஒரு நவீன நகரத்துக்கான தொலைநோக்கும் தீர்க்கதரிசனமும் தலைவர் கலைஞரிடம் இருந்தது. அப்படியான தீர்க்கதரிசனத்தில் உருவானதுதான் சென்னை மெட்ரோ ரயில் திட்டம்.  


தமிழ் காக்க ரயில் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த போது தொடங்கிய கலைஞரின் ரயில் காதல், தனது இறுதி நாட்களில் சொந்த ஊரான திருவாரூருக்கு ரயிலில் செல்லும் வரை தொடர்ந்தது. அதே பாணி சுற்றுப்பயண முறையைத்தான் இன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சரும் 'கள ஆய்வில் முதலமைச்சர்' திட்டம் மூலம் கைக்கொண்டிருக்கிறார்.


இந்திய அளவில் கொல்கத்தாவும், டெல்லியும் மெட்ரோ உருவாக்கத்தில் முன்னோடி நகரங்கள். இவை இரண்டும் இந்தியா முழுவதையும் கட்டி ஆண்ட காலனிய அதிகாரம் குவிந்திருந்த நகரங்களும் கூட. வளர்ச்சியின் தொடர் ஓட்டத்தில், சென்னை பின் தங்கி விடக்கூடாது என்ற காரணத்தால், இங்கு மெட்ரோ ரயில் அமைக்க வேண்டும் என்ற திட்டத்தை கலைஞர் கொண்டிருந்தார்.


துரிதமான, தூய்மையான பயணம்


உலகமயமாக்களின் நன்மையை மிக விரிவாகவும், விரைவாகவும் அடைந்திருந்த தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை, வேலை தேடி வரும் பிற மாவட்ட மக்களுக்கு அடைக்கலம் தரும் இடமாகி இருந்தது. பெருகும் வேலைவாய்ப்பினால் மக்களின் இடப்பெயர்வு சென்னை நோக்கி அதிகரித்த‌து. இது ஏற்படுத்திய மக்கள் நெரிசல் போக்குவரத்து நெரிசலாக உருமாறி இருந்தது. சென்னையின் சாலைகள் நெரிசல் காரணமாக வாகனங்களைக் கையாளும் திறனை இழந்திருந்தன.


இப்படியான சூழலில்தான் கலைஞர் மெட்ரோ ரயிலுக்கான‌ அறிவிப்பை 2007 ஆம் ஆண்டு வெளியிட்டார். பொதுப் போக்குவரத்தின் அடுத்த பரிணாமம் மெட்ரோ ரயில் என்பதை கலைஞர் மிகச் சரியாகக் கண்டடைந்திருந்தார். மெட்ரோ ரயில் திட்டத்தின் பெரும்பாதியைத் தொடக்கம் முதல் கவனித்து வந்தவர் அன்றைய துணை முதலமைச்சரும் இன்றைய முதலமைச்சருமான கழகத் தலைவர் அவர்கள்.


பெருகி வந்த வாகன நெரிசல் ஏற்படுத்திய காற்று மாசும், ஒலி மாசும் சென்னை மீதான பார்வையையே மெல்ல மெல்லச் சிதைத்துக் கொண்டிருந்தது. மெட்ரோ ரயில் இதை எல்லாம் வெகுவாக குறைத்தது. துரிதமாக, தூய்மையாக அதே நேரத்தில் குளிரூட்டப்பட்ட பயண அனுபவத்தை மெட்ரோ ரயில் வழங்கியது.


அ.தி.மு.க. மோனோ ரயில் தோல்வி


சென்னையில் மெட்ரோ ரயில் பணிகளைச் செயல்படுத்தவும், மேற்பார்வையிடவும் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் என்ற ஒரு நிறுவனம் உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு அரசும் - இந்திய ஒன்றிய அரசும் இந்நிறுவனத்தின் கூட்டுப் பங்குதாரர்களாக விளங்குகிறார்கள். ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு ஆணையம் வழங்கிய கடன் மூலம் சென்னை மெட்ரோ ரயிலுக்கான முதல் கட்டப் பணிகள் 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன‌. 32 நிலையங்கள், இரண்டு வழித் தடங்கள் என மொத்தம் 45 கிமீ நீளத்துக்கு இந்த முதல் கட்ட மெட்ரோ ரயில் கட்டமைப்பு அமைந்திருந்தது.


இடையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் மெட்ரோ கட்டுமானப் பணிகள் சுணக்கமடைந்தது. கலைஞர் கொண்டுவந்த திட்டம் என்ற ஒரே காரணத்துக்காக 'மோனோ ரயில்' என்ற திட்டம் மெட்ரோ ரயிலுக்கு எதிராக அ.தி.மு.க. அரசால் முன்வைக்கப்பட்டது. ஆனால் அதற்கான செயல்பாட்டுச் சாத்தியங்கள் மிகக் குறைவாகவே இருந்தது என்பதாலும் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வந்த காரணத்தாலும் மெட்ரோ ரயில் பணிகள் விரைந்து செயல்படுத்தப்பட்டு 2015 ஆம் ஆண்டு ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரையிலான 7 நிலையங்கள் மட்டும் திறந்துவைக்கப்பட்டன. 2015 முடிக்கப்பட்டிருக்க வேண்டிய மெட்ரோ ரயில் பணிகள் 2019 வரை நீண்டதற்கு அரசியல் காழ்ப்புதான் காரணமாக இருந்தது.  


நகரத்தின் அழகை மெருகூட்டிய ரயில்


சென்னை மெட்ரோ ரயிலின் முதல் கட்டம் சென்னை நகரத்தின் முக்கியமான முனையங்களை இணைந்திருந்தது. சென்னை விமான நிலையம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் போன்ற முக்கிய போக்குவரத்து மையங்களை மெட்ரோ ரயில் இணைத்திருந்தது. மேலும் சைதாப்பேட்டை, கிண்டி, வண்ணாரப்பேட்டை, பிராட்வே, பூங்கா, பரங்கிமலை, ஜார்ஜ் கோட்டை ஆகிய இடங்களில் பேருந்து நிலையங்களுக்கு அருகிலேயே மெட்ரோ நிலையம் அமைந்திருந்தது. இதன் மூலம் ஒரு போக்குவரத்து சேவையிலிருந்து மற்றொரு போக்குவரத்துக்குச் சேவைக்கு மாறிக்கொள்ளும் வகையிலும் திட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தது.


சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பாதிக்கும் அதிகமான நிலையங்கள், சுரங்க ரயில் நிலையங்களாகவே அமைக்கப்பட்டன‌. அதுவரை சாலைக்கு மேலே பயணித்துக் கொண்டிருந்தவர்களைச் சுரங்கத்துக்குக் கடத்தியதன் மூலம் போக்குவரத்து நெரிசலை வெகுவாகக் குறைக்க முடிந்தது. வரலாற்றுக் கட்டிடங்களையும் பாரம்பரிய நினைவுச் சின்னங்களையும் அதிகம் கொண்ட சென்னை மாதிரியான நகரத்தில், சுரங்க ரயில் என்பதே சிறப்பான கட்டமைப்பாக இருந்தது.


நகரத்தின் அழகையும் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டுமானங்களின் அழகையும் பாழ் படுத்தாத வகையில் மெட்ரோ ரயில் கட்டுமானங்கள் அமைந்திருந்தன‌. சுரங்கத்தில் ரயில் நிலையம் அமைக்கக் காலமும் செலவும் அதிகம் என்றாலும் அரசு ஒப்புதல் அளித்தது. சென்னை நகரின் மீது கலைஞர் கொண்டிருந்த அக்கறை மெட்ரோ கட்டுமானத்திலும் பிரதிபலித்தது.


எட்டுத்திக்கும் மெட்ரோ


இன்றைக்கு மதுரை மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களுக்கும் மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் தொடங்கப்பட்டு சீரிய முறையில் நடந்து வருகின்றன‌. சென்னை நகரத்தில் அனைத்து முக்கிய இடங்களையும் இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் உருவெடுக்கவுள்ளது. அதற்கு முன்னோட்டமாக, தேனாம்பேட்டையில் மெட்ரோ ரயில் தலைமை அலுவலகம் நமது திராவிட மாடல் அரசால் 2022 ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது. இதற்கெல்லாம் தொடக்கப்புள்ளியாக இருந்தவர் தலைவர் கலைஞர்.


‘ஒரு மரத்தை வளர்ப்பதற்கு 10 ஆண்டுகள் தேவை; ஆனால் அதன் பயன்பாட்டை காலாகாலத்துக்கும் துய்க்கலாம்’ என்று ஒரு சீனப் பழமொழி உண்டு. இன்றைக்கு ஒரு மரம் போல் வளர்ந்து வரும் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள், பல தலைவர்களது பெயர்ப் பலகையைத் தாங்கி இருந்தாலும் அதற்கான ‘விதை’, தலைவர் கலைஞர் போட்டது என்பதை மறக்கக்கூடாது.!

Comments

  1. தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்ததற்கு தொலைக்கு சிந்தனை கொண்ட தலைவர்கள் நம் நாட்டில் இருந்தார்கள் அதனால் தான் நாம் அந்த பயனை அனுபவிக்கிறோம்

    ReplyDelete

Post a Comment