நாம் ஏன் ஒளியைத் தேடுவதில்லை!

 


பல நேரம் எவ்வித திட்டமிடலும் இன்றி யதார்தமாக நடைபெறும் நிகழ்வுகளுக்கிடையே கூட மெல்லிய தொடர்பு இழையோடுவதை வியக்காமல் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. சித்திரை முழுநிலாவை கண் சிமிட்டாமல் கண்ட பிறகு, எழுத்தாளர் வயலட் எழுதிய  ‘இதோ நம் தாய்’ குறு நாவலை வாசிக்க தொடங்கினேன். ஆரம்ப பக்கங்களில் அது கொண்டிருந்த பௌத்தம் குறித்த வரலாறு ஆச்சரியமூட்ட செய்தது. புத்தகத்தின் பின்னட்டையை படித்துவிட்டு உள்ளே நுழையும் எவர்க்கும் நிலவும் மிக சாதாரண வியப்பு அது என்பதில் எனக்கு துளியும் சந்தேகமில்லை. 

பக்கங்களை புரட்ட புரட்ட, தம்மபதமும் அதன் வழியாக அயோத்திதாச பண்டிதரும், பௌத்த அறிஞர் William rhys davis-ம், Hermann Oldenberg-ம் தம்மபதத்தை தமிழில் மொழியாக்கம் செய்த கே.எஸ்(ப. இராமஸ்வாமியும்) தத்துவங்ககளை நிரம்ப கொண்டிருக்கும் பாத்திரங்களாக விவரிக்க பட்டிருந்தார்கள். பூர்வ பௌத்தம் என்ற பெயரில் பண்டிதர் விளக்க முயன்ற ‘உள் மெய்’ கோட்பாட்டின் பிரதியை இந்த பாத்திரங்களின் ஊடாகவும் அவை நிகழ்த்த முயன்ற உரையாடங்களில் வாயிலாகவும் புரிந்துகொள்ள முடிந்தது. 


நூலில் ஒரு கட்டத்தில் கிறித்துவமும் பௌத்தமும் ஊடாட்டம் நிகழ்த்துகின்றன, அங்குதான், அந்த தருணத்தில் தான்  மேரி மாதா, இந்த உலகம், நம் தாய், மொழிபெயர்ப்பு எல்லாம் அர்த்தப்படுகிறது. இந்த நாவலுக்கு முன் கதை ஏனோ அவசியமாக இருக்கிறது. நாவல் முழுக்க இந்த முன் கதை தான் பரவி கிடக்கிறது. 


‘35 வயதில் வாழ்க்கை இப்படிதான் இருக்குமா’ என்ற மனசோர்வுடன் தொடங்கும் ஆனந்தியின், அகம் புறத்துடன் நிகழ்த்தும் தத்துவார்த்த உரையாடல்கள் தான் நாவலை நகர்த்தி செல்கின்றன. மனித பெயர்களை கொண்ட பூனைகள் தத்துவார்த்த தூதுவர்கள் போல் நாவல் முழுக்கவே அங்குமிண்டு தாவி கொண்டிருக்கிறார்கள். சத்தமில்லாது வந்து செல்லும் பூனையின் காற்தடங்கள் எனக்கு ஏனோ உளச்சோர்வின் அறிகுறிகளை மட்டுமே குறிப்பால் உணர்த்துவதாக தெரிந்தது. “பூனைகளை தொட்டுக்கொஞ்சுபவர்கள் உளச்சோர்வை அடைகிறார்கள். உளச்சோர்வுள்ளவர்கள் பூனைகளை தொட்டுக்கொஞ்ச விரும்புகிறார்கள். இதெல்லாம் நிரூபிக்கப்பட்ட உண்மைகளா, அறிவியல் ஊகங்களா தெரியவில்லை.” என்று இரண்டு நாட்களுக்கு முன்பு ஜெயமோகன் தன் வலைத்தளத்தில் எழுதியிருந்தது ஏனோ ‘பூனை’ என்ற சொல்லை வசித்த தருணத்தில் எல்லாம் நினைவில் தோன்றி அடங்கி கொண்டிருந்தது. 


இந்நூலில் ஆங்காங்கே தோன்றி மிளிர்ந்த, 

 

‘நாத்திகர்களே நரகத்தில் நம்பிக்கை வையுங்கள்’

‘கவிதை ஒருவருக்கு கடவுள் நம்பிக்கையை தருமா, இல்லை நம்பிக்கையை கொல்லுமா?’ 

‘இருளே இவுலகின் இயற்கை’ 

‘எல்லா தற்கொலைகளும் போராட்டம்தான்’

‘தம்மபதம் மானுட அறிவின் பழமொழி’ போன்ற சில வாக்கியங்களை படித்ததும் ஆழமாக எதையோ யோசிக்க மனம் எத்தனித்து கொண்டிருந்தது. ஆனால் நூலில் ஆங்காங்கே வரும் இறப்புகளும், பிரிவுகளும், அக முறிவுகளும் சிந்தனையில் இருந்து என்னை மீட்டு  துயரில் ஆழ்த்தி கொண்டிருந்தன.     

   

நாவல் முழுக்கவே இழப்பை மட்டுமே சந்தித்து வந்த ஆனந்தியின் அகமும் தவிப்பில் தான் ஆழ்ந்திருக்க வேண்டும், அதிலிருந்து தன்னை மீட்டுக்கொள்ள அவர் பூனைகளையும், மொழி பெயர்ப்பையும், பௌத்தத்தையும், நண்பர்களையும் துணை கொள்கிறார். தன்னுடலில் மீது இச்சமூகம் ஏவும் பாலின ரீதியிலான ஈட்டிகளை அகம் என்ற கேடயத்தை கொண்டே எதிர்கொள்கிறார். அது பெரும்பாலும் ஆனந்தியின் தாயாரான கௌதமியின் கையில் இருந்தே ஏவப்படுகிறது. நூலை படிப்பதும், கடல் பார்ப்பதும், வாகனம் ஓட்டுவதுமாக அன்றாட நிகழ்வுகள் கூட தியானம் போன்ற ஆழத்தை இந்நூலில் கொண்டிருக்கின்றன. 


பற்றற்று இருக்கும் ஆனந்தியின் வாழ்க்கையில், ‘நீ எதை நம்புகிறாய்?’ என்ற கேள்வி நாவல் முழுக்க எழுப்பப்பட்டு கொண்டே இருக்கிறது. சமயங்களில் அவர் உள்ளத்தை ஆழ்த்தி கொள்ளும் தம்மபதத்தில் அதற்கான தீர்வுகள் இருக்கின்றன, அதுவும் கே.எஸ் மொழியாக்கம் செய்த தம்மபதத்தில். மனசோர்வில் இருந்து மீட்டு கொள்ள அது தான் வழியாகவும் வாசலாகவும் இருக்கிறது. 


நாவலை நான் நிறைவு செய்தபோது, மணி அதிகாலை 3. பௌத்த பூர்ணிமா என்பதை கூகிள் நாட்காட்டி நினைவூட்டியது. ப.இராமஸ்வாமி மொழியாக்கத்தில் தம்மபதத்தை  எடுத்து வாசித்தேன். 


இயல் பதினொன்று 

முதுமை 

(ஜரா வக்கம்)


144-ம் சூத்திரம் 


‘இந்த உலகம் எப்பொழுதும் எரிந்துகொண்டேயிருக்கையில், இங்கே என்ன சிரிப்பு? இங்கே என்ன களியாட்டம்? இருளால் மூடப்பட்டிருக்கும் நீங்கள் ஏன் ஒளியைத் தேடுவதில்லை?’




Comments