Hello World!
சுயவிமர்சனமாகவே இதை எழுதுகிறேன். சீர்படுத்தி செயல்பட வேண்டும் என்றே இதை குறிப்பிடுகிறேன். திமுக போன்ற பாரம்பரிய கட்சிகளுக்கு அதன் வரலாறும், மரபும், அதிகார படிநிலையும் சுமையாகி இருப்பதை கவனிக்க முடிகிறது.
காலத்திற்கு ஏற்றார் போல் நாம் புதுப்பிக்க தவறிய சிந்தனைகள் நம்மை விரட்ட தொடங்கியுள்ளன. அதே பழைய சிந்தனைகளை புது மொழியில் சொல்லி கொண்டிருக்கிறோம். புது மொழியில் சொல்ல வேண்டிய புதிய சிந்தனைகளை உருவாக்க தவறியிருக்கிறோம். அல்லது தாமதித்து கொண்டிருக்கிறோம்.
தமிழ்நாடு முழுக்க தன்னெழுச்சியாக நடைபெறும் Gen Z சந்திப்புகள், வடிவமாக புதிதாக தோன்றினாலும், உள்ளடக்கத்தில் அவை மரபில் சிக்கி தவிப்பவை. தான் சார்ந்த தலைமுறையிடம் சமகால பிரச்சனைகள் குறித்து உரையாடாமல் மீண்டும் பழங்கதைகளையே பேசி வருகிறோமோ என்று தோன்றுகிறது. என் கூற்றில் தவறிருக்கலாம். போதாமைகளை யாரேனும் சுட்டிக்காட்டி தானே ஆக வேண்டும்.
பழங்கதைகளுக்கு ஒரு மதிப்பிருப்பதை மறுக்கவில்லை. ஆனால் பழங்கதைகளும் வரலாற்று பெருமிதங்களும் நம்மை எவ்வளவு தொலைவுக்கு கூட்டிச் செல்லும்? எதிர்காலம் பற்றிய நமது எண்ணம் என்ன?
அரசியல்-பொருளாதாரம்- சமூக துறைகளில் நமது எதிர்கால நிலைப்பாடுகள் என்ன? மாறிவரும் கால சூழலுக்கேற்ப நமது கொள்கைகளை மேம்படுத்தி கொண்டுள்ளோமா? சிக்கலான விஷயங்களை எளிமையாக்கி மக்கள் மொழியில் அவற்றை விவரிக்கும் கருவிகள் நம்மிடம் உள்ளனவா?
தனிமனித அடையாளங்கள் முன் எப்போதையும் விட பல்கி பெருகியுள்ளன, அப்படி இருக்கையில் அவை பற்றியோ, பால் புதுமையினர் பற்றியோ நமது நிலைப்பாடு என்ன?
அமெரிக்க-சீன பொருளாதார மாதிரிகள், சோசலிச சமுதாயம் சாத்தியமில்லை என்பதை நிறுவியுள்ளன. அப்படியான ஒருதுருவ ‘நவதாராள பொருளாதார’ சூழலில் சமத்துவத்தை நிலைநாட்டும் வகையில் செல்வத்தை மறுபகிர்வு(Wealth Redistribution) செய்ய நாம் கொண்டுள்ள யோசனைகள் என்ன?
அரசியலில் தென்னிந்திய மாநிலங்களின் சுயாட்சி உரிமைக்காக நாம் ஒலிக்கும் குரலில் ஒற்றுமை உள்ளதா அல்லது அது நமது தனிக்குரலா? ஒற்றுமைக்காக நாம் மேற்கொண்டுள்ள முன்னெடுப்புகள் என்னென்ன?
தொழில்நுட்ப வளர்ச்சி தனி மனித அந்தரங்கத்தில்(Privacy) செலுத்தும் ஆதிக்கம் Octopus போல் விரிந்துள்ளன. இவற்றை வைத்து Big tech companies ஈட்டும் லாபம் அபரிமிதமானது, அவை நம்மிடமிருந்து சுருட்டும் தரவுகள் பணத்தை காட்டிலும் மதிப்புமிக்கவை. இதை எதிர்கொள்ள நாம் ஆற்றப்போகும் செயல்பாடுகள் எவ்வாறானவை?
இப்படி துறை வாரியாக யோசிக்க தொடங்கினால் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.
நான்காம் தலைமுறை திராவிடம், தனது முந்தைய தலைமுறைகளை போல் சிந்திப்பதால் ஒரு மாற்றமும் இருக்க போவதில்லை. Upgrade என்பது முழுக்க முழுக்க உள்ளீடு சார்ந்தது, தோற்றம் சார்ந்தது அல்ல.
உண்மையை சொன்னால் திராவிட இயக்க சார்பு கொண்ட துறை சார் நிபுணர்கள் இவை பற்றி எல்லாம் சிந்தித்து நமக்கும் நம் கட்சிக்கு ஆலோசனைகளையும் தீர்வுகளையும் வழங்க வேண்டும். நாம் அவற்றை விசாரித்து ஏற்கும் தன்மை கொண்டவற்றை ஏற்று கொள்ள வேண்டும்.
புதிய சிந்தனைகள் வர வேண்டும், அதன் பொருள் பழையவற்றை மறக்க வேண்டும் என்பதோ மறுக்க வேண்டும் என்பதோ அல்ல.
#Dravidam #New_Thinking #Musings



Comments
Post a Comment