பெரியார் அண்ணல் பார்வையில் தேசியம் - IDEAS

 




“I don’t praise something because it’s my language, my nation, my religion… if I think my nation is unhelpful for my ideal and cannot be made helpful I will abandon it immediately”

- Periyar EVR  


“The desire for separate existence gets its legitimacy from its concrete determination and move towards the formation of a democratized society.”

- Dr. B R Ambedkar


தேசியம் குறித்தும் தேசிய விடுதலை இயக்க போராட்டங்கள் குறித்தும் இங்கு பல்வேறு பார்வைகள் முன்வைக்க படுகிறது. தேசியவாத பார்வை, மார்க்சிய பார்வை, காலனிய பார்வை, விளிம்புநிலை மக்கள்(Subaltern) சார்ந்த வரலாற்று பார்வை. சமீபத்தில் வாசித்த “Nationalism Without a Nation in India” என்கிற புத்தகம் தேசியவாதத்தை சமூகவியல் - வரலாறு சார்ந்த அணுகியிருந்தது.


 இந்நிலையில் தேசிய  விடுதலை இயக்கங்கள் செயல்படும்போதே அதிலிருந்து தனித்து இயங்கி இரண்டு முக்கிய ஆளுமைகள்(பெரியார், அம்பேத்கர் ) பற்றியும். தேசியம் சார்ந்து அவர்கள் கொண்டிருந்த நிலைப்பாடுகள் பற்றியும் இந்த கட்டுரை விளக்குகிறது. மேலும் அரசியல் விடுதலையை விட சமுக விடுதலையை அவர்கள் எந்த அளவுக்கு மதித்தார்கள் என்பதையும் இந்த கட்டுரை அலசுகிறது. 


இந்தியாவில் தேசிய இயக்கம் 


இந்தியா அடைப்படையிலேயே சாதிய ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த துணைக்கண்டம், இங்க பன்முக கலாச்சாரங்களின் அடர்த்தியும் அதிகம். புவியியல் அமைப்பு காரணமாக பண்பாட்டு மொழியியலும் இங்கு பரந்துபட்டவை. சமத்துவமின்மை இங்கு படிநிலை தன்மையை(Graded Inequality) கொண்டிருந்தது. பார்ப்பனர்கள் பார்ப்பனிய தத்துவத்தின் தலைமையை கைப்பற்றியிருந்தார்கள் . அவர்கள் ஊடாக தான் இந்த சாதிய அமைப்பு நிறுவப்பட்டிருக்கிறது. இங்கு வர்ணமே வர்கமாகவும் செயல்படுகிறது .   


கிழக்கிந்திய கம்பெனி வணீகம் செய்ய வந்த காலம் தொடங்கி இந்திய துணை கண்டத்தின் பகுதிகளை தனது ஆளுகைக்கு கொண்டு வரும் வரை, இங்குள்ள சாதி அமைப்பை அவர்கள்  கிஞ்சித்தும் சீர்திருத்த நினைக்கவில்லை.


அரசு என்கிற அதிகார அமைப்பை நிறுவ பார்பனர்களையே பயன்படுத்தி கொண்டார்கள். நிலபிராபத்துவ காலத்தில் இருந்த அதிகாரத்தை நவீன அரசு அமைப்பிலும் அவர்கள் தக்கவைத்து கொண்டார்கள். 1857 புரட்சிக்கு பிறகு தான் பிரிட்டிஷ் வைசிராயின் நேரடி தலைமைக்கு கீழ் வருகிறது இந்தியா. 1857க்கு பிறகு வெகு மக்கள் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தும் கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டது. 


அதுவரை உயிர்ப்புடன் இருந்த பார்ப்பன- பிரிட்டிஷ் கூட்டணி இந்த நிகழ்வுக்கு  பிறகு தளர்வடைய தொடங்குகிறது. காரணம் சாதி அமைப்பின் மூலம்  நிறுவப்பட்ட அதிகாரங்களை எதிர்த்து குரல்கள் எழ ஆரமித்ததால். சாதி இழிவின் காரணமாக கல்வி பெறுவோர் எண்ணிகையும்  மதமாற்றங்களும்  அதிக அளவின் நடக்க தொடங்கின. மிஷனரிகள் இதை தீவிரமாக முன்னெடுத்தது. சீர்திருத்த இயக்கங்களும் இதன் காரணமாக தோன்றின.  வெகு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்ட காரணத்தால் 

சாதி அமைப்பை நோக்கி எதிர் குரல்கள் ஒலிக்க தொடங்கியது. 


தேசிய இயக்கமும் இதற்கேற்ப சில மாற்றங்களை செய்துகொண்டு இயங்க தொடங்கியது. ஒரு சில தலைவர்களின் நவீன சிந்தனை தவிர்த்து, தேசியம் என்பதை அவர்கள் ஹிந்து மதத்தின் புனிதத்தன்மையை காப்பாற்றுவதும் வர்ண தர்மத்தை நிறுவுவதையும் தான் நோக்கமாக கருதினார்கள். மிதவாதிகளும் - தீவிரவாதிகளும் இந்த  அடிப்படையில் தான் வேறுபட்டர்கள். ஒப்பீட்டளவில் மிதவாதிகள் நவீன பண்புகளை கொண்டிருந்தனர். காந்தியின் வருகை ஒருவித போலி மதசார்பற்ற தோற்றத்தை கொடுத்தாலும் அது முழுக்க முழுக்க வர்ண அமைப்பை காக்கும் விதத்தில் தான் இருந்தது. இந்த அபாயத்தை காந்தி உணர்வதற்குள் அவரின் பிடி காங்கிரஸ் இயக்கத்தை விட்டு விலகி இருந்தது. 


பெரியார்- அம்பேத்கர்-தேசியம் 


இந்நிலையில் தான் பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் தேசியம் குறித்து கொண்டிருந்த பார்வைகள் கவனம் பெறுகிறது. இருவரும் தேசியம் குறித்து நவீன சிந்தனைகளை கொண்டிருந்தார்கள். "சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம்" என்று அம்பேத்கரும். "சுயமரியாதை, பகுத்தறிவு, சாதி ஒழிப்பு" என்று பெரியாரும் தேசியம் பற்றிய நவீன  பார்வைகளை கொண்டிருந்தார்கள். 


சுதந்திரமான, அதே நேரத்தில் சமமான குடிஉரிமைக்காக(Free and Equal Citizenship) தான் அவர்கள் அரசியல் விடுதலையை(Political Freedom) விட சமூக விடுதலையை(Social Liberty) முன்னிலை படுத்தினார்கள். சமூக விடுதலையின் மூலம் ஒரு அரசியல் அடையாளத்தை உருவாக்க முடியும் என்பதை அவர்கள் நம்பினார்கள். இதன் வெளிப்பாடு தான் அண்ணல் அம்பேத்கர் வரைந்த அரசியல் அமைப்பு சட்டம், பெரியார் "தமிழ்நாடு தமிழருக்கே" என்றது இதன் அடிப்படையில் தான். 


“ஜப்பான்காரன் நமது கொள்கைகளை ஏற்றுக்கொண்டால் அவனும் திராவிடன் தான்” என்கிற அனைவரையும் உள்ளடக்கிய(Inclusive) பார்வை பெரியாரிடம் இருந்தது. 


 பிராந்திய  எல்லைகளை இலட்சியமாக கொண்ட தேசியத்தை  இருவரும் இறுதி இலக்காக கொள்ளவில்லை, மக்களை பற்றிய அக்கறை அவர்களின் தேசியம் குறித்த பார்வையில் பதிந்தே இருந்தது.


பழமையில் இருந்து மீள்வதும், நவீன மதிப்பீடுகளை நடைமுறைப்படுத்தி அமைக்கப்படுவதும் தான் ஒரு நல்ல தேசமாக இருக்கும் என்று அவர்கள்  கருதினார்கள். 


3000 க்கும் அதிகமான சாதிகள் இருக்கும் இடம் எப்படி ஒரு தேசமாக இருக்க முடியும்? தேசத்தின் அடிப்படையே கூட்டு சுய -உணர்வு(Collective Self- Conciousness ) தான். சாதியின் காரணமாக இழிவுகளும் ஏற்றத்தாழ்வுகளும் உயிர்ப்புடன் இருக்கும் போது  அதை ஒரு தேசமாக எப்படி கருதுவது என்கிற கேள்வியை வெவ் வேறு சமயங்களில் இருவரும் கேட்டிருந்தார்கள். 



சாதி தேசியம் 


அண்ணல் அம்பேத்கர் இந்தியா என்கிற அரசியல் அடையாளத்தை பழமையில் இருந்து மீட்டு நவீன பண்புகளை அடிப்படையாக  கொண்ட ஒரு அடையாளமாக  இருக்க வேண்டும் என்பதை தான் கற்பனை செய்திருந்தார். 


"எனக்கு எந்த பற்றும் இல்லை, ஒன்றின் பண்புக்காகவும் அதன் மூலம் ஏற்படும்  நன்மைக்காகவும் தான்  ஒரு முடிவை நான் எடுக்கிறேனே ஒழிய அது என் மொழி, என் நாடு, என் மதம் என்பதற்காக இல்லை" என்ற பகுத்தறிவு- நடைமுறைவாத சிந்தனையை பெரியார் கொண்டிருந்தார். 


தன் இறுதி நாள் வரை "தமிழ்நாடு தமிழருக்கே" என்று பெரியார் சொன்னது பழமைவாத கருத்துக்களின் அடிப்படையிலோ மொழியியல் ரீதியாகவோ மட்டும் அல்ல மாறாக  அம்பேத்கர் கொண்டிருந்த "சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்" போன்ற நவீன பண்புகளை பெரியாரும் கொண்டிருந்தார். இருவரும் வெவ்வேறு தளங்களின் ஒரே நோக்கத்திற்காக இயங்கினார்கள்.


 சாதி இழிவில் இருந்து மனிதனை விடுவிப்பதன் மூலம் இருவரும் ஒரு நவீன தேசியத்தை முன்வைத்தார்கள் அந்த தேசியமும் தேசமும் இன்று வரை உருவாகிக்கொண்டே இருக்கிறது, ஆமையை விட மெதுவாக. 


Sources : 


  1.  Nationalism Without a Nation in India(1998) - G. Aloysius

  2.  Ambedkar’s Political Nationalism Context, Contour & Content(2014) - G Aloysius

  3.  Nation Impossible(2009- epw) - MSS Pandian  

  4. 'Denationalising' the Past: 'Nation' in E V Ramasamy's Political Discourse(1993-epw) - MSS Pandian

  5. Nationalism: A Very Short Introduction(2005) - Steven Grosby


 


Comments

  1. கெளதம் சூப்பர் டா. அருமையான படைப்பு. எழுத்து நடை அற்புதம். கருத்தாழம் கொண்ட வரிகள். உன்ன நெனைச்சா பெருமையா இருக்கு ❤

    ReplyDelete
  2. சர்ச்சைக்குரிய விவாத தலைப்பு.
    எளிமையான விளக்கம்!❤🔥

    ReplyDelete
  3. எழுத்து நடை பாராட்டுதலுக்கு உரியது . முடிவு சிறப்பு.

    ReplyDelete
  4. தேசத்தின் அடிப்படையே கூட்டு சுய -உணர்வு ❤️🔥
    You have done a great write up daa boii... 💥 More way to go !!
    உன்னோட புரிதல்
    உன் வரிகளில் கமழ்கிறது ...!

    Slow and steady wins the race 🎯

    ReplyDelete

Post a Comment