ஆஷ் அடிச்சுவட்டில் அறிஞர்கள் ஆளுமைகள்

 




  “ஆஷ் அடிச்சுவட்டில் அறிஞர்கள் ஆளுமைகள் “  புத்தகம், வெவ்வேறு சமயங்களில் எழுதப்பட்ட ஆளுமைகள், அறிஞர்கள்   குறித்த கட்டுரைகளின் தொகுப்பு, நூலாக்கம் பெறும்போது பல புதிய செய்திகளையும் சேர்த்து வெளிவந்துள்ளது. இந்நூலை படிக்க நேரம் பிடித்தது. அதற்கு காரணம் ஒரு கட்டுரையை படித்த பின்னர் ஏற்படும் தேடலை அடக்க முடியவில்லை. 


நூலின் முதல் கட்டுரையை (அஷ் அடிச்சுவட்டில் ) படித்துவிட்டு, திரு. ஆ. சிவசுப்பிரமணியன் எழுதிய ‘ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும்’ என்ற நூலையும் திரு.சலபதி எழுதிய "திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908"  நூலையும் வாசிக்கலானேன். ஒரு கட்டுரையை எத்தகைய தேடல் தாகத்தை ஏற்படுத்தியது என்பதற்கு இது ஒரு சான்று. இன்னும் தேடிக் கொண்டு  தான் இருக்கிறேன். 


இரண்டாம் கட்டுரையை ("எல்லீசன் என்றொரு அறிஞன்") படித்ததன்  காரணமாக Thomas R. Trautmann  எழுதிய "Languages and nations: the Dravidian proof in colonial Madras " நூல் கண்ணில் பட்டது. 'திராவிடச் சான்று' என்று இதன் தமிழ் மொழிபெயர்ப்பும் வெளிவந்துள்ளது. இப்படி ஒவ்வொரு கட்டுரையும் ஏற்படுத்தும் ஆர்வத்தை தீர்க்கவே நாள் எடுத்தது. 


ஜி.யு. போப் பற்றிய கட்டுரை, அவர் கல்லறையில் எழுதிப்பட்டிக்கும்

 உண்மை வாசகங்களை சுட்டிக்காட்டியதுடன்.  சுவாரசியமான வாசிப்புக்காக தமிழ் வரலாற்று எழுத்தில் நாடகப்பாங்கில் அமைந்துள்ள மிகப்படுத்தல்களையும் குறிப்பிடுகிறார், இல்லாத ஒன்றை இருப்பதாக உருவாக்கும்  சூழ்ச்சியை இந்த கட்டுரை வெளிச்சமிட்டு காட்டுகிறது. "சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு" என்ற குரலுக்கு இக்கட்டுரையும் இது போலவே இந்நூலில் இடம்பெற்றுள்ள பிற கட்டுரைகளும் சாட்சி. 


பழந்தமிழ் இலக்கியங்களை தேடி தேடி தொகுத்து வெளியிட்ட உ.வே.சா பற்றிய "உதிராத மலர்கள்" என்ற கட்டுரையை , "இழந்து கொண்டிருக்கும் உலகத்தை மீட்டுத்தரும் ஓர் அவதாரமாக அவரைப் பலர் பார்த்திருக்கிறார்கள்" என்ற வாக்கியத்தின் நீட்சியாக சொல்லலாம். 


இருபதாண்டுகள் முயற்சி எடுத்து ஒன்றரை லட்சம் செலவில் மஹாபாரதத்தை தமிழ் கொண்டு வர வேண்டும் என்று நினைத்த ராமானுஜாச்சாரியாவின் கதை சுயராசியம் நிறைந்த ஒன்று, கிட்டத்தட்ட தமிழ் கலைக்களஞ்சாயத்திற்கு இணையான ஒரு மெனக்கெடலை அவர் மேற்கொண்டிருந்தார். இவர் உ.வே.சா விடம் கொண்டிருந்த நட்புறவையும் இந்நூலில் பதிவுசெய்துள்ளார் சலபதி. 


தஞ்சாவூரை சேர்ந்த டி.வி சாம்பசிவம் பிள்ளை  என்பவரின் தனி முயற்சியால் மருத்துவ அகராதி ஒன்றை வெளியிடுகிறார், 4000 பக்கங்கள் 80,000 தலைச்சொற்கள் என்ற அளவில் "A Tamil-English Dictionary of Medicine, Chemistry, Botany and Allied Sciences " பெயரில் வெளியானது. 1931 இல் முதல் தொகுதி வெளியாகி இருந்தாலும் கடைசி இரண்டு தொகுதிகள்(4 ,5) 47 ஆண்டுகள் கடந்து  தான் வெளியாகியது. அந்த சமயத்தில் சாம்பசிவம் பிள்ளை மறைதிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தகுந்த செய்தி. 


ராமாநுஜலு  நாயுடு பற்றிய கட்டுரை ஒரு பத்திரிகையாராக அவரின் எழுத்து ஆளுமையை நம் கண்முன் காட்சி படுத்துகிறது. "கதை சொல்வதில் சமர்த்தர்" என்று புதுமைபித்தனால் பாராட்டப்பட்டுள்ளார். 1907இல் திரு டி.ஏ.ஜான் நாடார் தொடங்கிய வார இதழுக்கு "திராவிடாபிமானி" என்று பெயரிட்டவரும் இவரே. வரதராஜுலு நாயுடுவின் தமிழ்நாடு என்ற பத்திரிகையையும் ஆனந்த குணபோதினி, அமிர்த குணபோதினி, தமிழின்பம், போன்ற  இதழ்களையும்  இவர் நடத்திவந்துள்ளார். 


வ.உ.சி  மற்றும் திலகர் ஆகியோர்கிடையே இருந்த உறவை ஒரு கட்டுரை பேசுகிறது, பல்வேறு தரவுகளை ஆதாரமாக கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. சுவாரசியமான நிகழ்ச்சிகளின் கோர்வையாக இந்த கட்டுரை அமைந்துள்ளது.  


ஏ.கே.செட்டியாரின் முழு பெயர் அண்ணாமலை கருப்பன் செட்டியார் என்பதை அறிந்த போது வியந்தேன். பெரும் உழைப்பின் விளைவாக இவர் வெளியிட்ட காந்தி பற்றிய முழு நீள படம் இன்றைக்கு இருக்கும் இடம் தெரியாமல் போனதை நினைத்து வருந்த தான் முடியும். காந்தி பற்றி வெளியான முதல் திரைப்படமும் அது தான். தமிழ்நாட்டில் பிறந்த ஒருவர் இத்தகைய முயற்சியை மேற்கொண்டதாலோ என்னவோ இவர் பெயர் அகில இந்திய  காந்தி அறிஞர்களாலும் தேசியவாதிகளாலும் சரியாக நினைவுகூர படுவதில்லை.  


பாரதி படைப்புகளையும் அவரின் புகைப்படங்களையும் வெளியிட்ட ரா.அ பத்மநாபன் குறித்து "பாரதிக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை இடம்பெற்றுள்ளது. பாரதி போன்ற ஆளுமையை மீட்டெடுக்க இவர் போன்ற தனிமனிதர்களின் உழைப்பை நினைத்தால் வியப்பாக தான் இருக்கிறது. எதையும் பதிவு செய்யும் மனங்கொள்ளாத சமுகத்தில் இது போன்ற சில தனி மனிதர்களின் முயற்சியால் தான் இன்றைக்கும் சில படைப்புகள் நமக்கு படிக்க கிடைக்கிறது. ‘அலகாபாத்தில் காந்தி அஸ்தி கரைப்பின்போது வானொலியில் தமிழ் வருணனை இவருடையது.’ என்ற வரியை படித்த போது ஏற்பட்ட உணர்வை என்னவென்று சொல்வது. எத்தனை வரலாற்றாய்வாளர்கள் தமிழ் சூழலில் இப்படி நுணுக்கமாக வரலாற்றை அணுகுகிறார்கள்? 


Tamil Characters: Personalities, Politics, Culture நூலில் கம்யூனிஸ்டுகளே மறந்த  சி .எஸ். சுப்பிரமணியம் அவர்களின் அரசியல் பணி குறித்த ஒரு கட்டுரையை படித்தேன், இந்நூலில் அவரின் சில புகைப்படங்களும் மேலும் சில வாழ்க்கை குறிப்புகளும் , புத்தகங்களை எழுதுவதிலும் வெளியிடுவதிலும் அவர்  கொண்டிருந்த ஆர்வத்தையும் அறியமுடிகிறது.   


காலக் கிழவன் என்ற தலைப்பில் வரலாற்றறிஞர் எரிக் ஹாப்ஸ்பாம்(Eric Hobsbawm ) பற்றிய கட்டுரை எனக்குள் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது , இந்த கட்டுரையை படித்துவிட்டு ஹாப்ஸ்பாமின் புத்தகங்களை அரை நாள் செலவழித்து அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தேடி எடுத்தேன். சில புத்தகங்களே அங்கு காண கிடைத்தது. ஆனால் இவரின் புத்தகங்களை படிக்க  வேண்டும் என்ற ஆர்வம் மிகுதியாகவே ஏற்பட்டுள்ளது. 


இறுதி கட்டுரையாக தே. வீரராகவன் குறித்த கட்டுரை இடம்பெற்றிருந்தது. ‘சாதிக்கு பாதி நாளா?’ புத்தகத்தின் முதல் பகுதியிலே இவர் குறித்த செய்திகளை படித்திருந்தாலும், கண் பார்வை குறைபாடுகளுடன் முனைவர் பட்டம் பெற்ற முதல் மாணவர் இவர் என்பதை நினைக்கவே வியப்பாக இருக்கிறது. தமிழ்நாட்டின் பல்கலைக்கழக வரலாற்று பேராசிரியர்கள் சேர்ந்து வாசித்ததை விட இவரின்  வாசிப்பு அதிகம் என்று குறிப்பிடுகிறார் சலபதி. ‘சாதிக்கு  பாதி நாளா?’ புத்தகத்தை படித்தவர்கள் இதை உணர் முடியும். 


சமுகத்தில் தனி மனிதர்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது என்பதற்கு இந்நூல் ஒரு எடுத்துக்காட்டு. திரு சலபதி அவர்களின் கையெழுத்திட்ட புத்தகம் என்பதால் தனிப்பட்ட முறையில் எனக்கும் இது விசேஷமான புத்தகம் தான். 


தேடல் நிறைந்த மனிதனுக்கு தீனி போட்டும் அதே சமயத்தில் பசியை அதிகரிக்கவும் செய்யும் இதுபோன்ற புத்தகங்களின் வருகை தமிழ் வரலாற்று சூழலில் ஆக்கபூர்வமான செயல்பாடு என்று தான் சொல்ல வேண்டும். 


வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அவசியம் வாசிக்கவும். 


காலச்சுவடு






Comments