போர் நின்று கொல்லும்! - ஷோபாசக்தியின் புனைவுலகம்.
சரியாக 16 ஆண்டுகளுக்கு முன்னர், இதே திகதியில்(மே 17-18) தான் ஈழத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்தேறியது. லட்சக்கணக்கான அப்பாவி மனித உயிர்களை பல பத்தாண்டுகளாக உண்டு செரித்த உள்நாட்டு போர் முடிவை எட்ட இந்த சம்பவம் முக்கிய காரணமாக அமைந்தது. போரின் பின் விளைவுகளை 2022 இலங்கை பொருளாதார நெருக்கடி வெளிச்சமிட்டுக் காட்டியது. இன்றைக்கு சர்வதேச தமிழ்ச் சமூகம் ஈழப் போரின் துயரங்களில் இருந்தும் ஆற்றாமையில் இருந்தும் மீண்டு வந்து கொண்டிருப்பதை அனுமானிக்க முடிகிறது. இலங்கையில் நடந்து முடிந்த அனைத்து அடுக்கு தேர்தல்களின் முடிவுகளும் இதையே நமக்கு உணர்த்துகின்றன. அங்குள்ள மக்களுக்கு அமைதி அவசியமான ஒன்றாக இருக்கிறது. போர் முடியலாம், போர் ஏற்படுத்தி சென்ற வடுவும் இழப்புகளும் ஒரு இனத்தின் கூட்டறிவில் இருந்து அகல வாய்ப்பில்லை. பல வழிகளில் அவை வெளிப்பட்டு கொண்டே இருக்கும். இசையும், இலக்கியமும், சினிமாவும், கலையும் போரின் வரலாற்றை நமக்கு நினைவூட்டி கொண்டே இருக்கின்றன. 2024-ஆம் ஆண்டுக்கான புக்கர் விருது எழுத்தாளர் V.V. Ganeshananthan-ன் ‘Brotherless Night’ நாவல...